டீக்கடைல பாட்டு கேட்டுட்டு புல் எனர்ஜியோட கோமல் ரூமுக்கு வந்து சேர பவித்ராகிட்ட இருந்து போன் வந்துச்சு. கோமலுக்கு அப்பத்தான் பவித்ராகிட்ட இந்த விஷயத்த சொல்லலங்கற விஷயமே மைண்ட்ல ஸ்பார்க் ஆச்சு. போன அட்டெண்ட் பண்ணி விஷயத்த சொன்னா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு புரியாம குழம்பிட்டு இருக்கும் போதே போன் ரிங் ஆகி கட் ஆச்சு. பொய் வாழ விடாது . உண்மை சாக விடாதுன்னு என்னிக்கோ படிச்சது மைண்ட்ல வந்து கோமல உண்மைய சொல்ல தூண்டுச்சு. கோமல் பவித்ராவுக்கு போன் அடிச்சான். போன் அட்டெண்ட் பண்ணதும் “ஹேய் ..ஸாரிடா நீ பிஸியா இருப்பன்னு எனக்கு தெரியும் .. இருந்தாலும் உன்கிட்ட பேசணும் போல இருந்துது.. ஒரு 2 மினிட்ஸ் மட்டும் பேசிட்டு வெச்சுடேன்” பவித்ரா படபடன்னு சொல்ல ..கோமல் ஒரு 20 நிமிஷம் நிதானாமா நடந்தத சொல்லி முடிச்சான். அடுத்த செகண்ட் “நீ அவ்ளோதான் கோமல். லவ்ல ..லைப்ல எல்லாத்துலயும் தோக்க போற .. உனக்கு நான் கிடைக்கவே மாட்டேன் .. ஒரு வேளை நீ என்ன கழட்டி விடறதுக்காகவே டிலே பண்றியோன்னு தோணுது. விட்ரு கோமல் .. இனி உனக்கும் எனக்கும் எதுவும் இல்ல” பவித்ரா கோபமா சொல்லிட்டு போன வைக்க, கோமலுக்கு வாழ்க்கை ஒரு சூனியம் போலவும் பவித்ரா அவனுக்கு சூனியக்கார கிழவி மாதிரியும் தெரிஞ்சா. பவித்ரா மேல கொலவெறி , ரத்த காட்டேரி வெறி எல்லாம் வந்துச்சு. அதை எங்க யாருகிட்ட காட்டறதுன்னு தெரியாம கோமல் கன்ப்யூஸ் ஆகி ரூம் சுவத்துல ஒட்டி வெச்சு இருந்த ஜேம்ஸ் கேமரூன்கிட்ட காட்டுனான். ஜேம்ஸ் கேமரூம் மூஞ்சில ஓங்கி பொக்கு ..பொக்குன்னு குத்திட்டு வலியோட கோமல் நிற்க , ஜேம்ஸ் கேமரூன் போட்டோல ஜாலியா சிரிச்சுட்டு இருந்தாரு. கோமல் போட்டோவ பாத்து “ஏன் சார்.. ஏன் ? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? முடியலன்னு” லைட்டா கண்கலங்குனான். கோமல் இப்படி புலம்பிட்டு இருக்கும் போதே மறுபடியும் பவித்ராகிட்ட இருந்து போன் வந்துச்சு. எடுக்கவே கூடாதுன்னு நினைச்ச கோமல் போன எடுத்தான். பேசவே கூடாதுன்னு நினைச்ச கோமல் பவித்ராகிட்ட பேசுனான். பவித்ரா ஸாரி சொல்ல, பதிலுக்கு “என் சிச்சுவேஷன் புரிஞ்சுக்க மாட்டியா நீ ..நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமான்னு” கோமல் உருக , அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் பேசி முடிச்சு பவித்ரா கோமலுக்கு முத்தம் குடுத்துட்டு போன வெக்க, போட்டோல இருந்த ஜேம்ஸ் கேமரூன் “இந்த பொழப்புக்கு நீயெல்லாம்ன்னு” நக்கலா ஒரு பார்வை பார்த்தாரு. கோமல் அவர ஐ டூ ஐ சந்திக்கறத அவாய்ட் பண்ணிட்டு முதல் வேலையா போன் டயலர் ட்யூன “எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே” பாட்ட மாத்துனான். இனி பவித்ரா போன் பண்ணும் போதெல்லாம் இந்த பாட்டுதான் கேக்கும். இனி அவ பீல் பண்ணமாட்டானு கோமல் பீல் பண்ணான். கட் பண்ணா கோடம்பாக்கம் கூடி பேசற அம்மன் டீ ஸ்டால்ல கோமல் டீ குடிச்சுட்டு இருந்தான். ஒரு படம் கமிட் ஆகி ட்ராப் ஆகறத விட அத எல்லாரும் துக்கம் விசாரிக்கற மாதிரி விசாரிக்கறதுதான் கடுப்பேத்தற மாதிரி இருக்கும். டீக்கடைல கோமலுக்கு அதான் நடந்துச்சு. அப்புறம் கோமல் ..ட்ராப் ஆயிடுச்சாமே? ஏன் ? ஒருத்தரு கேட்டுட்டு போனதும் இன்னொருத்தரு வந்து “ படம் ட்ராப்ன்னு சொன்னாங்க.. என்னாச்சு பைனான்ஸ் பிரச்சனையான்னு கேட்டாரு. அவரு போனதும் அடுத்து ஒருத்தர் வந்து “என்னங்க கோமல் இப்படி ஆயிடுச்சு ..இனி உங்கள எல்லாரும் ராசி இல்லாத டைரக்டர்ன்னு சொல்லுவாங்களே.. என்ன பண்ண போறீங்கன்னு கேட்டாரு. அவரு போனதும் 25 வருஷமா கோ டைரக்டராவே வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கற ஆறுமுகம் வந்து “என்னடா தம்பி ஞ்படம் கமிட் ஆகி ட்ராப் ஆயிடுச்சாமே... எப்ப படம் பண்றோம்ங்கறது முக்கியம் இல்லடா .. எப்படி படம் பண்றோம்ங்கறதுதான் முக்கியம்ன்னு அட்வைஸ் குடுத்தாரு. கோமலுக்கு ஏற்கனவெ எரியற கொள்ளில எரிசாராயத்த ஊத்துன மாதிரி இருந்துச்சு. அதுல சில பேர் படம் ட்ராப் ஆனத நினைச்சு உள்ளுக்குள்ள சந்தோஷப்பட்டாலும் வெளில சோகமா பீல் பண்ணி பேசறாங்கன்னு தெரிஞ்சுது. இந்த சினிமா உலகமே இப்படித்தான் அடுத்தவன் வெற்றிய கொண்டாடாம தோல்விக்கு பார்ட்டி வெச்சு சந்தோஷமா கொண்டாடும். இங்க ஜெயிக்கறவன வாழ்த்துவறவங்கள விட அதப் பார்த்து வயிறு எரியறவங்கதான் அதிகம். கோமல் அதனால பெருசா அலட்டிக்காம சிம்பிளா வாட்ஸ் அப் டிபிய “இதுவும் கடந்து போகும்” அப்படின்னு மாத்துனான். இனி என் வாழ்க்கைய நானா செதுக்கறன்னு சபதம் எடுத்தது எல்லாம் ஓக்கே..